கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை : மரணம் ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர்களே பொறுப்பு- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.!

Scroll Down To Discover

கட்டிடங்கள், வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தொட்டியில் சுத்தம்செய்வதன் மூலம் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இதனால் பலரும் மனிதகழிவுகளை மனிதர்களே நீக்குவதா என்று கண்டனம் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி, கட்டிடங்கள், கழிவுநீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒருவேளை தனி நபரை நியமித்து சுத்தம் செய்யும்போது மரணம் ஏற்பட்டால் வீட்டு உரிமையாளர்களே பொறுப்பாவார்கள் என்றும், அவ்வாறு இறக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உரிமையாளர்கள் ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனிநபர் நியமிக்கப்படுவதை மக்கள் அறிந்தால் 14420 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.