ஊர்க்காவல் படையினருக்கு சம்பளம் வழங்காத அரசு -தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..

Scroll Down To Discover

தன்னலம் பாராமல் பணியாற்றும் ஊர்க்காவல் படையினருக்கு சம்பளம் வழங்காத, மாநில அரசின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது’ என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தமிழக காவல் துறையின் ஒரு துணை அமைப்பாக ஊர்க்காவல் படை, 1946ல் இருந்து போலீசாருக்கு உறுதுணையாக பணியாற்றி வருகிறது. பேரிடர் காலங்களில் ஊர்க்காவல் படையின் பங்கு அளப்பரியது.இவர்களுக்கு 2,800 அல்லது 5,600 ரூபாய் மட்டுமே மாத சம்பளமாக கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த தொகை குடும்பம் நடத்த போதுமானதாக இருக்காது. எனவே, காவல் துறை முன்னாள் அதிகாரி என்ற பொறுப்புணர்வுடன், பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தேன்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஊர்க்காவல் படையினருக்கு ஒப்பந்த அடிப்படையில், மாதம், 5, 10 நாட்கள் மட்டுமே பணி தருவது என்பது குறைவு என கருத்து தெரிவித்தனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், ஒரு நாள் ஊதியம் என்பது போலீசாருக்கு கிடைக்கும் ஊதியத்திற்கு சமமாக இருக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே 2015ல் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளனர்.வழக்கு முடிந்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும், நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை மதித்து, தமிழக அரசு இன்னமும் கொள்கை முடிவை எடுத்து அறிவிக்கவில்லை.

ஒரு சில மாவட்டங்களை தவிர, பல மாவட்டங்களில் ஐந்து மாதமாக ஊதியம் வழங்கப்படவே இல்லை.தன்னலம் பாராமல் பணியாற்றும் ஊர்க்காவல் படையினருக்கு, சம்பளம் வழங்காத மாநில அரசின் அலட்சியப் போக்கை கண்டிக்கிறேன். உயர் நீதிமன்ற அறிவுரையை ஏற்று, ஊதிய உயர்வுக்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.