உ.பி. அரசு விளம்பரத்தில் கொல்கத்தா பாலம் : சர்ச்சையில் சிக்கிய முதல்வர்

Scroll Down To Discover

உத்தரப் பிரதேசம் அடையும் மாற்றம் என்ற தலைப்பில் உத்தரப் பிரதேச அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் மேற்கு வங்கம் மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள மேம்பாலம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இந்நிலையில், உ.பி., யின் வளர்ச்சியை விளக்கும் விதமாக நாளிதழ்களில் முழு பக்க விளம்பரத்தை யோகி ஆதித்யநாத் அரசு நேற்று வெளியிட்டது. விமர்சனம்அதில், யோகி ஆதித்யநாத் படத்துடன் சில தொழிற்சாலைகள், வானுயர்ந்த கட்டடங்கள், பிரமாண்ட மேம்பால புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

‘ஆதித்யநாத் தலைமையில் மாறும் உத்தர பிரதேசம்’ என்ற வாசகமும் அதில் இடம் பெற்றுள்ளது.அந்த விளம்பரத்தில் இடம் பெற்றுள்ள மேம்பால புகைப்படம், மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ‘மா’ மேம்பாலம் என்பது தெரிய வந்துள்ளது.

மேம்பாலத்தில் பூசப்பட்டுள்ள நீலம், வெள்ளை நிறம், கோல்கட்டாவில் மட்டுமே இயங்கும் மஞ்சள் நிற டாக்சியும், அந்த படத்தில் தெளிவாக தெரிகின்றன.மேலும், அந்த விளம்பரத்தில் உள்ள பிரமாண்ட கட்டடங்கள், ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சொந்தமானவை என்பதும் தெரிய வந்துள்ளது.’மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கட்டிய மேம்பாலத்தின் புகைப்படத்தை போட்டு, அதில் பெருமை தேடி கொள்ள யோகி ஆதித்யநாத் முயற்சிக்கிறார்’ என, பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.


இது குறித்து, திரிணமுல் காங்., எம்.பி., அபிஷேக் பானர்ஜி கூறியதாவது:மம்தா தலைமையில் கோல்கட்டாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பணிகளின் புகைப்படங்களை திருடி அதை, தான் செய்ததாக விளம்பரம் செய்து கொள்வதே உ.பி.,யில் ஏற்பட்டுள்ள மாற்றம். பா.ஜ.,வின் இரட்டை ‘இன்ஜின்’ ஆட்சி உ.பி.,யில் தோல்வியை தழுவியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, விளம்பரத்தில் இடம்பெற்ற படம் தொடர்பாக தவறு நடந்துவிட்டதாகவும், தங்களின் டிஜிட்டல் பதிப்பில் இருந்து இதனை நீக்கிவிட்டதாகவும் விளம்பரத்தை வெளியிட்ட அங்கில ஊடகம் விளக்கமளித்துள்ளது.