உலக பசி குறியீட்டு அறிக்கை போலி தகவல் : இந்தியாவின் இமேஜை கெடுக்க முயற்சி – மத்திய அரசு விளக்கம்..!

Scroll Down To Discover

உலக பசி குறியீட்டு தரவரிசையை இந்தியா ஏற்க மறுத்துள்ளதோடு, நாட்டின் இமேஜை கெடுக்கும் தொடர்ச்சியான முயற்சி என மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது.

அயர்லாந்து நாட்டின் கன்சர்ன் வேர்ல்ட்வைட் (Concern Worldwide ) மற்றும் ஜெர்மனியின் வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே (Welt Hunger Hilfe) ஆகிய அமைப்புகள் இனைந்து ஆண்டுதோறும் உலக பட்டினிக் குறியீட்டை வெளியிட்டு வருகின்றன. உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் வளர்ச்சி, சரிவிகித உணவு, குழந்தைகள் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமை, சிசு உயிரிழப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து ஆண்டு தோறும் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்தாண்டுக்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 121 நாடுகள் கொண்ட பட்டியலில் 107ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு இந்தியா 101ஆவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 6 இடங்கள் சரிந்துள்ளது. அதோடு இந்த தரவரிசை பட்டியலில் அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை விட இந்தியா பின்தங்கியுள்ளது.

சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா இவ்வளவு மோசமான நிலையில் இருப்பது மத்திய அரசு மீது பெரும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. இந்த சூழலில் இந்த ஆய்வு பட்டியலை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், இந்தியாவின் பிம்பத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆய்வு உள்ளது. உலக பசி குறியீட்டு அறிக்கை போலி தகவல்களை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. உண்மைக்கு மாறாக வேண்டும் என்றே இந்த அறிக்கை உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய உணவு பாதுகாப்பு திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் அரசின் முயற்சிகளை இந்த அறிக்கை வேண்டும் என்றே புறக்கணித்துள்ளது. இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் வெறும் 3,000 நபர்களை மட்டும் வைத்து இந்த கருத்து கேட்பு நடைபெற்றுள்ளது என அரசு பதிலில் தெரிவித்துள்ளது.