உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – கணக்கில் வராத ரூ.6.68 லட்சம் பறிமுதல்.!

Scroll Down To Discover

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முதல் தளத்தில், உதவி இயக்குனர் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த உமாசங்கர் (57), உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு அலுவலகத்தில் இருந்து, சொந்த ஊருக்கு செல்வதற்காக உமாசங்கர் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமசந்திரன் தலைமையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தை சுற்றி வளைத்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உதவி இயக்குனர் உமாசங்கர் வைத்திருந்த பையில் இருந்து 6 லட்சத்து, 68 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. உரிய கணக்குகள் இல்லாமல் இருந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

மேலும் இது குறித்து நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு 6 லட்சத்து, 68 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இதே அலுவலகத்தில் உதவி இயக்குனராக இருந்த விஷ்ணுபரண், அவரது கார் ஓட்டுனர் சரவணன் இருவரும் கணக்கில் வராத, லஞ்சப்பணம் விவகாரத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
– மதுரை ரவிசந்திரன்