ஈஷா வித்யா பள்ளி மாணவர்களுக்காக நிதி திரட்டும் தன்னார்வலர்கள் 21 நாளில் 1950 கி.மீ சைக்கிளில் பயணம்.!

Scroll Down To Discover

சென்னையைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் பலி என்ற இரண்டு தன்னார்வலர்கள் ஈஷா வித்யா பள்ளியில் கிராமப்புற ஏழை குழந்தைகள் கல்வி பயில்வதற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதற்காக அவர்கள் இருவரும் தமிழகம் முழுவதும் 21 நாட்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர். டிசம்பர் 24-ம் தேதி சென்னையில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கிய அவர்கள், திருத்தணி, வாணியம்பாடி, தர்மபுரி, கரூர், பெரம்பலூர், கடலூர், கும்பகோணம், அறந்தாங்கி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, மதுரை, ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி உள்ளிட்ட ஊர்கள் வழியாக நாளை (ஜனவரி 12) கோவை வந்தடைகின்றனர்.

இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக 10 ஈஷா வித்யா பள்ளிகளுக்கும் அவர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர். அங்குள்ள ஆசிரியர்கள் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்த சைக்கிள் பயணத்தின் மூலம் ஈஷா வித்யா பள்ளி குறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அவர்கள், தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மூலம் நிதி திரட்டும் பணியையும் மேற்கொண்டுள்ளனர்.

அவர்களின் இந்த நல்ல நோக்கத்தை பாராட்டும் விதமாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாராட்டுகள் ஐயப்பன் & பலி – அபார செயலுறுதியும் பொறுப்புணர்வும் இருந்தால்தான் நீங்கள் மதிக்கும் விஷயத்திற்கு உடலை வருத்தி செயலாற்ற முடியும். பேரார்வமும் கருணையும் செயலும் என்ன சாதிக்கமுடியும் என நிரூபித்துள்ளீர்கள். இம்முயற்சியால் பலபேர் வாழ்க்கைக்கு நன்மை செய்கிறீர்கள். ஆசிகள்” என்று தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய கிராமப்புற ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வி கற்பிப்பதற்காக, ஈஷா கல்வி அறக்கட்டளை மூலம் ஈஷா வித்யா பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 8,000-க்கும் மேற்பட்டோர் கல்வி கற்கின்றனர். அவர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் முழு இலவச கல்வி உதவித் தொகை மூலம் கல்வி பயில்வது குறிப்பிடத்தக்கது.