இ-பாஸ் பெற சமூக இடைவெளி விதியை மீறி குவிந்த மக்கள் – மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாசல் மூடப்பட்டது

Scroll Down To Discover

இந்தியாவில் இன்று(ஏப்.,24) காலை 9:00 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,077 ஆக அதிகரித்துள்ளது. 718 பேர் பலியாகி உள்ளனர். 4,749 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். உயிரிழப்புகளில் மஹாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. அங்கு 283 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து குஜராத்தில் 112 பேரும், ம.பி.,யில் 83 பேரும், டில்லியில் 50 பேரும், ராஜஸ்தானில் 27 பேரும், தமிழகத்தில் 20 பேரும் ஆந்திராவில் 27 பேரும், கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கை முன்னிட்டு பொதுமக்கள் தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறுபவர்களுக்கு அபராதம், வழக்கு பதிவு, வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.


மதுரையில் வாகனங்களை குறிப்பிட்ட வேளைகளில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கும் இ-பாஸ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் என தகவல் வெளியானது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களில் பலர் சமூக இடைவெளி விதிகளை கடைப்பிடிக்காமல் வாகன இ-பாஸ் பெற குவிந்து விட்டனர். பலர் சுய பாதுகாப்பிற்கான முககவசம் அணியாமலும் சென்றனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர். எனினும், கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது. இதனை தொடர்ந்து அதிகாரிகளின் உத்தரவின்படி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாசல் அடைக்கப்பட்டது.