இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டை குறி வைத்து ட்ரோன் தாக்குதல்..!

Scroll Down To Discover

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசவின் ஹமாஸ் படைத் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது ட்ரோன் ‛அட்டாக்’ நடத்தப்பட்டுள்ளது. இதில் நெதன்யாகு உள்பட யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில் என்ன நடந்தது? என்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன், காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். இவர் தான், கடந்த ஆண்டு அக்., 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர். ஹமாஸ் அமைப்பின் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக கூறி இருந்தார்.

இந்நிலையில், இன்று(அக்.,16) இஸ்ரேலில் வடக்கு நகரமான சிசோரியாவில் உள்ள பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் லெபனானில் இருந்து ஏவப்பட்டுள்ளது என பிரதமரின் செய்திதொடர்பாளர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டின் அருகே இன்று ட்ரோன் ஒன்று வெடித்து சிதறியது. தாக்குதல் நடந்த போது, வீட்டில் நெதன்யாகுவும், அவரது மனைவியும் இல்லை. லெபனானில் இருந்து ஏவப்பட்ட மற்ற இரண்டு ட்ரோன்கள் டெல் அவிவ் பகுதியில் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஒரு ட்ரோன் சிசேரியாவில் உள்ள ஒரு கட்டிடத்தைத் தாக்கியது. இதனால் பலத்த சேதம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.