இந்திய கடல் பகுதியில் போதைப் பொருள் கடத்தல்: இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது.!

Scroll Down To Discover

இந்திய கடல் பகுதி வழியாக, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

உளவுத் தகவல் அடிப்படையில், இந்திய கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த மீன்பிடி படகு ஒன்றை இந்திய கடலோர காவல் படையினரும், போதைப்பொருள் கட்டுப்பாடு பிரிவினரும் இடைமறித்து கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திற்கு கடந்த 8-ம் தேதி கொண்டு வந்தனர்.

படகை சோதனை செய்தபோது எதுவும் சிக்கவில்லை.இதையடுத்து அந்த படகில் வந்த 6 இலங்கை மீனவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சர்வதேச கடல் எல்லை பகுதியில், பாகிஸ்தான் மீன்பிடி படகில் இருந்து 100 கிலோ ஹஷிஸ், 150 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதை மாத்திரைகள் வாங்கியதை ஒப்புக் கொண்டனர். இலங்கைக்கு திரும்பும் வழியில், இந்திய கடலோர காவல் படை கப்பலை பார்த்ததால், 5 கட்டுகளில் இருந்த 250 பாக்கெட் போதை பொருட்களை கடலில் தூக்கி எறிந்ததாக ஒப்புக் கொண்டனர்.

சேகரிக்கப்பட்ட சில பொருட்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இலங்கை மீனவர்கள் குரேரா, பெர்ணாண்டோ, தேசப்பியா, ஜெயதிசா, சாதுருவன், அருணாகுமார் ஆகியோர் இந்திய கடல் பகுதியில் போதைப் பொருள் கடத்தியதற்காக போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.