“இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம் என்பது பெருமைக்குரியது – சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி உரை

Scroll Down To Discover

75-வது சுதந்திர தினம், கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில், கட்டுபாடுகளுடனும், அதே நேரத்தில் வழக்கமான உற்சாகத்தோடும் நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை மூவர்ணக்கொடியேற்றி வைத்து, வீர வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து நாட்டு மக்களுக்கு அவர் சுதந்திர தின உரையை ஆற்றினர் வருகிறார்.

இந்த விழாவில் மூத்த மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பதக்கங்களைப் பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை விவரம் வருமாறு:-

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளை நினைவு கூர்வோம். தியாகிகளுக்கு தலை வணங்குகிறேன். நாட்டு பிரிவினை அனைவருக்கும் வேதனை தந்தது. கோவிட் ஒழிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் நாம் நன்றியை தெரிவிப்போம். கோவிட் தடுப்பூசி நமது நாட்டில் தயாரிக்கப்பட்டதால் பலரும் இன்று பலன் அடைந்துள்ளனர். சப்கா ஷாத் சப்கா விகாஸ் என்ற முழக்கத்தின்படி நாட்டில் அனைவரது வளர்ச்சியே நமது இலக்கு. இதற்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.


சாலை வசதி, மின் இணைப்பு ,காஸ் இணைப்பு மூலம் பல கோடி பேர் நன்மை பெற்றுள்ளனர். அனைத்து கிராமங்களிலும் சாலை வசதி வங்கிக்கணக்கு என்பதும் நமது இலக்கு. அனைவருக்கும் சுகாதார வசதியை அளிப்பது அரசின் கடமை. ஏழை குடும்பத்தை சேர்ந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மருத்துவ வசதியை பெற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படும். வலுவான உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவும். மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை அமல் படுத்தி உள்ளோம். ஏழைகளுக்கு நல்ல சத்துள்ள தரமான அரிசி வழங்கி வருகிறோம். குறைந்த விலையில் தரமான மருந்துகள் வழங்கப்படுகின்றன. தகவல் தொடர்பால் அனைவரும் இணைக்கப்பட வேண்டும்.இந்திய மண்ணில் விளைந்த பொருட்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறது.சூரிய ஒளி மின்சாரம் விவசாயிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது

பின்தங்கிய 110 மாவட்டங்களில் வளர்ச்சிக்கென தனிக்கவனம் செலுத்தி வருகிறோம். கல்வி, சாலை வசதி, தகவல் தொடர்பு, வேலை வாய்ப்பு ஆகியனவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். நமது நடவடிக்கையால் கிராமங்களில் டிஜிட்டல் தாக்கம் அதிகரித்துள்ளது. கோவிட் காலத்தில் கூட தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு புதிய கல்வி கொள்கை அவசியம். பழம் பெருமைகளை நாம் மறக்கக்கூடாது.நாம் உற்பத்தி செய்யும் பொருட்கள் உலக தரத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.இந்தியா ஒரு காலத்தில் 8 பில்லியன் செல்போன்களை இறக்குமதி செய்தது, தற்போது 3 பில்லியன் செல்போன்களை நாம் ஏற்றுமதி செய்கிறோம். இது உலக அளவில் தொழில் வளர்ச்சியை வளர்ப்பதுடன் இந்தியாவை பெருமை பெற செய்யும்.

“இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம் என்பது பெருமைக்குரியது. புரட்சிக்கும், புதுமைக்கும் நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். காதி உற்பத்தியை பெருக்க வேண்டும். மிகபெரிய திட்டம் ஒன்று விரைவில் வர உள்ளது. போர் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய உள்ளோம். ஜம்மு காஷ்மீரில் தொகுதி வரையறை குழு அமைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்.

இந்தியாவில் ஒரு பகுதி கூட பின்தங்கிய பகுதியாக இருக்க கூடாது என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறோம்.ஏழைகளுக்கு 100 சதவீதம் வீட்டு வசதி கிடைக்க நடவடிக்கை.கோடிக்கணக்கான வீடுகளுக்கு குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை .நாட்டிற்கு பெருமை தேடி தந்த விளையாட்டு வீரர்களுக்கு கைகளை தட்டி உற்சாகம் ஏற்படுத்துவோம்.இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.