இடைநின்ற கல்லூரி மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பித் தர வேண்டும் – கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு..!

Scroll Down To Discover

இடைநின்ற அல்லது மாற்றுக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு, செலுத்திய கல்வி கட்டணத்தை திரும்ப வழங்குவதை அனைத்து கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இந்த ஆண்டு சி.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவும், நீட், ஜே.இ.இ ஆகிய தேர்வுகளின் முடிவுகள் காரணமாகவும் பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் தங்களது முடிவுகளை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது

இதனால், கல்லூரியில் இருந்து இடைநிற்றல் செய்த மாணவர்கள் மற்றும் மாற்றுக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு, அவர்கள் கட்டணமாக செலுத்திய தொகையை முழுவதுமாக கல்லூரி நிர்வாகங்கள் திருப்பித் தர வேண்டும். பல கல்லூரிகள் இவ்வாறு இடைநின்ற மாணவர்களிடம் கட்டணத்தை திருப்பி தராமல் இருப்பதால், அந்த மாணவர்களின் பெற்றோர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

அவ்வாறு கட்டணத்தை திருப்பி தராமல் இருப்பது யுஜிசி விதிகளுக்கு மீறிய செயல். எனவே இவ்வாறு விதிமீறலில் ஏடுபடும் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.