அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள்ளது – முதல்வர் பழனிசாமி

Scroll Down To Discover

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முதல் அமைச்சர் பழனிசாமி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: உலகையே அச்சுறுத்தும் கொடிய கொரோனா நோய் தமிழகத்திலும் பரவியுள்ளது. அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக கொரோனா பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளன. அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு அரசின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டாலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தலா 2 மாஸ்க்கள் இலவசமாக வழங்கப்பட இருக்கின்றன. இது ஆக.,5ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. தொடர் தடுப்பு நடவடிக்கைகளால் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது.

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஒவ்வொரு வீடாக பலமுறை சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. காய்ச்சல் முகாம்களால் கொரோனா தொற்று தடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 70 நடமாடும் மருத்துவமனையின் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகள் இருக்கின்றன.இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை தமிழகத்தில் தான் செய்யப்படுகிறது. மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். கடைகளுக்கு சென்றால் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றினால் இயல்பு நிலைக்கு நிச்சயம் திரும்ப முடியும். அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்