அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை..!

Scroll Down To Discover

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல்செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14-ம் தேதி கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்தது. கைது செய்யப்பட்ட பிறகு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அவரது உடல்நிலையை சுட்டிக்காட்டி அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.ஜெயச்சந்திரன், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துகடந்த அக்.19-ல் உத்தரவிட்டிருந்தார்.

அன்றைய தினமே செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரிஉச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை (அக்.30) விசாரணைக்கு வரவுள்ளது.