அமெரிக்கா பாராளுமன்றத்தில் நடந்த வன்முறை ; உலக தலைவர்கள் கண்டனம் – அமைதியான முறையில் அதிகாரம் மாற்றப்படுவேண்டும்-பிரதமர் மோடி

Scroll Down To Discover

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவர் வருகிற 20ந்தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

ஆனால், தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக அவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மேலும், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தி நீதிமன்றத்திலும் வழக்குத்தொடர்ந்தார். அந்த வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆனால், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் டிரம்ப், மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும் படியும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும்படியும் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், ஜோ பைடன் வரும் 20ந்தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழை வழங்க எந்த தடையும் விதிக்கப்போவதில்லை என துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகை நோக்கி டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கலைந்து செல்லும்படி உத்தரவிட்டனர். கலைய மறுத்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாகி சூடு நடத்தினர். அதில் பெண் ஒருவர் மீது குண்டு பாய்ந்தது. டிரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை நோக்கி முற்றுகையிட்டதால வெள்ளை மாளிகை சுற்றி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், தயவு செய்து தொண்டர்கள் அமைதி காக்கவும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அவர்கள் உண்மையிலேயே நம் நாட்டின் பக்கம் தான் இருக்கிறார்கள். அமைதி காக்கவும் என பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, கலகக்காரர்களை வெள்ளை மாளிகை கட்டிடத்தில் இருந்து வெளியேற்றும் பணியில் கேபிடால் நகர போலீசார் ஈடுபட்டனர். வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகை கட்டிடத்திற்குள் நுழைய முயன்ற டிரம்ப் ஆதரவாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் நேற்று மதியம் பலத்த காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார்.மேலும், வன்முறையில் நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் 3 பேரும் உயிரிழந்தனர். இந்த வன்முறையால், பல அதிகாரிகள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். கட்டடத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. இதனையடுத்து அந்த பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், வெள்ளை மாளிகை கட்டிடம் பாதுகாப்புடன் உள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உலக தலைவர்கள் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை:


பிரதமர் மோடி :- வாஷிங்டன்னில் நடந்த வன்முறை மற்றும் கலவரம் குறித்த செய்திகள் வேதனை அளிக்கிறது. அமைதியான முறையில் அதிகாரம் மாற்றப்படும் நடவடிக்கைகள் தொடர வேண்டும். ஜனநாயக நடைமுறைகளை, சட்டவிரோத போராட்டங்கள் மாற்றுவதை அனுமதிக்கக்கூடாது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ :- நமது அண்டை நாடும், நட்பு நாடான அமெரிக்காவில் ஜனநாயகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தால், கனடா மக்கள் ஆழ்ந்த வேதனையும், கவலையும் அடைந்துள்ளனர். மக்களின் விருப்பத்தை வன்முறை மாற்றிவிடாது. அமெரிக்காவில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்:- உலகம் முழுவதும், ஜனநாயகத்திற்கான எடுத்து காட்டாக அமெரிக்க பார்லிமென்ட் உள்ளது. ஜனநாயகத்தின் கோவிலாக அமெரிக்க காங்கிரஸ் உள்ளளது. இன்று நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியை அளிக்கிறது.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன்:- நடந்த சம்பவங்கள் தவறு. ஜனநாயகத்தில், மக்கள் அளித்த ஓட்டு, அவர்களின் எண்ணங்கள் கேட்கப்பட்டு அவை, அமைதியான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும்.