அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி – கொட்டும் மழையில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

Scroll Down To Discover

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில், நான்கு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றடைந்தார். விமானத்தில் அவர் வாஷிங்டன் சென்றடைந்தபோது மழை தூறியதால், பிரதமர் குடை பிடித்தபடி விமானத்திலிருந்து இறங்கினார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின்பேரில் அந்நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியிலிருந்து விவிஐபி-களுக்கான ஏர் இந்தியா ஒன் விமானம் மூலம், புதன்கிழமை காலை 11 மணிக்கு புறப்பட்டார். இந்த நிலையில், இந்திய நேரப்படி அதிகாலை 4 மணியளவில், பிரதமர் மோடி வாஷிங்டன் சென்றடைந்தார். அப்போது மழை தூறியதால், பிரதமர் குடை பிடித்தபடி விமானத்திலிருந்து இறங்கினார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


அமெரிக்க வாழ் இந்திய மக்களும் விமான நிலையத்தில் பெருந்திரளாக கூடி, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பாதுகாப்பு வளையத்தை மீறி, காரிலிருந்து இறங்கிய மோடி, கூடி நின்று வரவேற்பு அளித்த மக்களுக்கு கை குலுக்கினார்.

இந்நிலையில், பிரதமர் மோடி, இன்று ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசுகிறார்.


இதையடுத்து, அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸூடனும் சந்திப்பு நடக்கிறது. அப்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவுக்கான வாய்ப்புகள், குறிப்பாக, அறிவியல், தொழில்நுட்பத் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் பிரதமர், குவாட் மாநாட்டிலும் பங்கேற்கிறார். மேலும், நியூயார்க்கில் ஐநா பொது சபைக் கூட்டத்திலும் உரையாற்றுகிறார்.


முன்னதாக இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் பயண நேரத்தில் பிரதமர் மோடி, கோப்புகளை சரிபார்த்தார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்ட பிரதமர், நீண்ட விமானப்பயணம் என்பது கோப்புகளை அலசுவதற்கான நேரம் என்று குறிப்பிட்டார்.