அனைத்து துறைகளிலும் ஊழல்: கவர்னரிடம் ஸ்டாலின் புகார் : திமுக ஆட்சியில் டெண்டரில் ஊழல்: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு

Scroll Down To Discover

திமுக தலைவர் ஸ்டாலின், கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். அப்போது, அதிமுக அரசு மீதான 97 பக்க ஊழல் புகார் பட்டியலை வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:- தமிழக அமைச்சரவை மீதான 97 பக்க ஊழல் புகார் பட்டியலை கவர்னரிடம் அளித்துள்ளோம். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2018 ம் ஆண்டு ஊழல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் அனைத்து துறைகளில் ஊழல் நிலவுகிறது. அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் கவர்னரிடம் மனு அளித்தோம். முதல்வர், துணை முதல்வர் சொத்துகளை வங்கி குவித்தது குறித்து புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளோம். அதிமுகவினர் மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.


அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களுக்கு ஆதாரங்களை திரட்டி வந்துள்ளோம். முதல்வர், துணை முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிட முடியும். அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து பார்ட் ஒன் தான் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்த பார்ட் -2 விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் தூத்துக்குடியில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா சூழலில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு வழங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். நான் முதல்வர் ஆனதில் இருந்து ஸ்டாலின் என் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். தமிழகத்தில் தொழில் தொடங்க விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. தொழில் முனைவோரை ரத்தின கம்பளம் கொண்டு வரவேற்போம்.

திமுக ஆட்சிக்காலத்தில் தான் டெண்டர்கள் விட்டதில் தில்லுமுல்லுகள் நடைபெற்றுள்ளன. அவர்களின் டெண்டர்களில் தான் ஊழல் நடைபெற்றுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தை போன்று டெண்டர் இல்லை, தற்போது இ-டெண்டர் விடப்படுகிறது. அதில் முறைகேடுக்கு வாய்ப்பே இல்லை. அவர்களின் (திமுக) ஆட்சியில் நடந்த டெண்டர்களில் தான் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது. அவர்கள், புதிய தலைமை செயலகம் கட்ட ரூ.200 கோடி தந்துவிட்டு ரூ.425 கோடிக்கு கணக்குப்போட்டார்கள். சாலை அமைக்க விடப்பட்ட டெண்டர்களில் ஊழல் நடந்துள்ளது.